நரவேட்டை
அண்மையில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் “கார்டியன்” இதழின் இனையபக்கத்தில் ஒளிபடக்காட்சியொன்று ஓடிற்று. அதில் அந்தமான் தீவுப் பகுதியைச் சேர்ந்த சில வன பழங்குடி வாசிகளான பெண்களும், குழந்தைகளும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் வீசும் உணவுக்கும், ரொட்டிகளுக்குமாக நிர்வாணமாக நடனமாடுகின்றனர். அதை அந்த பயணிகளில் சிலர் பெருத்த ஆரவாரத்துடன், காட்சிகளாக பதிந்தும் கொள்கின்றனர்.
வனவிலங்குகளைக் காணச் செல்வோருக்கு பல அரிதான விலங்கினங்கள் தட்டுபடுவது அவ்வளவு எளிதானதல்ல. சில விலங்குகள் காலையிலும், சில மாலைப் பொழுதுகளிலும், சில எந்நேரமும் தென்படுவதுண்டு. அரிதான விலங்கினங்களைக் காண நாம் காத்திருக்க வேண்டும். அல்லது அதை பார்ப்பதற்கு வனத்துறை ஊழியர்கள் தரும் சில டிப்ஸ்களை பின்பற்றுவதோடு, அவர்களது ”எதிர்பார்ப்பையும்” நாம் பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்களில் போய் கால்கடுக்க காத்திருக்க வேண்டும்.
அவர்களையும் மீறி, சிலசமயம் அந்த விலங்குகள் தென்படாமல் நம்மை ஏமாற்றக்கூடும். துவக்கத்திலேயே குறிப்பிட்ட விலங்குகள் பார்க்க கிடைக்கவில்லையானால் எங்களை குற்றம் சொல்லக்கூடாது என்று அவ்வூழியர்கள் சொல்லிவிடுவதனால், “எங்கே அந்த மாமா சொன்னது போல ஒரு சிறுத்தை புலியைக் கூட கண்ணுக்குத் தென்படலையே!” என்று நமது குழந்தைகள் கேட்பதை நாம் தவிர்த்துவிடலாம். இவையெல்லாம் சாதராண சுற்றுலாப் பயணிகளுக்கும் மிக எளிமையான சரணாலயங்களுக்கும் பொருந்திவரக்ககூடிய எளிய விதிமுறைகள்.
வனப்பகுதிகளில் தென்படும் ஆதிவாசிகளை, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கரடிக்குட்டியை, அருகில் வரவழைப்பதற்கு திண்பண்டங்களை காட்டுவதுபோல, இரண்டுகால் மிருகங்களாக நினைத்து, அப்பழங்குடியினரை நடனமாடச் செய்து, புலனிச்சைக்கு பலியாக்குவது தாம் எந்தவகை நாகரிக மனிதன் என்பதை சொல்ல நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நிர்வான மனிதர்களை காண வாருங்கள் என்று அறிவிப்பு செய்யப்படவில்லையே தவிர, அவ்வாறு காட்டுவதாகச் சொல்லியே சில சுற்றுலாத் தரகர்கள் அயல்நாட்டினரை அந்தமான் பகுதிகளுக்கு கூட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகரீகத்தில் தாம் உயர்ந்தவர் என்ற பார்வையே சென்ற சில நூற்றாண்டுகள், சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியத்தையும், சக மனிதனை அடிமைப்படுத்திய வரலாறும் நிகழந்தன. அதுபோலவே, புதிய நாடுகள் கண்டுபிடித்ததன் வழி, பல திணைக் குடிகள் அழிந்துபட்டன.
கொலம்பஸ், பழங்குடிகளின் குருதியைக் கொண்டே நாடுகளின் வரைபடத்தை தீ்ட்டியதை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை.
அவுஸ்திரேலிய பழங்குடியினரின் பச்சைக் குருதியே அங்கு வந்தேறிகளின் தாகம் தணித்தன.
ஒவ்வொரு புதியவகை நாகரிக மனிதனின், அல்லது வந்தேறியின், கால்களுக்கு கீழ் ஒரு ஏதுமறியா பழங்குடியினனின், கல்லறை இருக்கவே செய்கிறது.
ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவு திணைக்குடியினர், வெள்ளையர்கள் அங்கு குடியேறியபோதே அழித்து ஒழிக்கப்பட்டவர் போக, ஏனையோர், மீய்ந்த வனப்பபகுதிக்குள் தஞ்சமடைந்தனர்.
அந்தமான் தினைக்குடியினர் அறுவகையினராவர், ஜாரவா, ஓங்கோ, சென்டினன்டல் வாசி, கிரேட்அந்தமான்வாசி, நிக்கோபார்வாசி, சாம்பெயினர்ஸ், போன்றோர், ஏற்கனவே நாகரிக மனிதனின் குடியேறி, பரப்பிய கொள்ளை நோய்களுக்கு ஆயிரக்கணக்கில் இவ்வினத்தினர் பலியாகிவிட்டனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும், வனவாசிகளின் இருப்பிடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டவை என்றாலும், அரிதான ”இரண்டுகால்” மிருகங்களை நிர்வாணமாக களித்துச் செல்லாமல் “இன்பச்சுற்றுலா“ எவ்வாறு நிறைவடையமுடியும்?.
யானைகளின் வலசைப் பாதைகளைப் போல, ஆதிகுடியினரின் வாழ்வாதாரப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் நாகரிகசாலைகளின் வழியில் தென்படும் ஆதியினர், சுற்றுலாவினரைப் பெயர் சொல்லாமல் ஈர்க்கும் சிறப்பு விருந்தினராகிவி்ட்டனர். இன்றய சுற்றுலாத் தலங்களில் பயணிகள் குறும்பாக வீசியெறியும் , நெகிலிப்பையோடு, உணவு மீதங்களை, திண்றுவிட்டும், மதுபானகுப்பிகளை அருந்திவிட்டும் தவிக்கும் குரங்குகளாக அந்தமான் பழங்குடியினர் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஆதிவாசிகளையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பதிவுசெய்யும் முகமாக ஆய்வாளர்கள் அங்கு சென்று அவர்களுடன், கலந்து பழகி வருவதுண்டு. அந்த வகையில் அவர்களது கலை, கலாசாரம், நுண்ணறிவு போன்றவை வெளியுலகுக்கு தெரியவருவதுடன், வியப்பளிக்கும் வகையில் இருப்பதையும் அறிந்துகொள்கிறோம். அவர்களது மருத்துவ அறிவைக் கொண்டு, மூலிகைத் தாவரங்களை தமது வியாபாரத்திற்கு பயன்படுத்தும் எத்தனையோ நிறுவனங்கள், ஆதிவாசிகளின் வனங்களை, சட்டத்திற்கு புறம்பாக முற்றுகையிட்டு வருகின்றனர்.
உலகெங்கிலும் ஆதிவாசிகள் தங்கள் வனங்களையும், இருப்பிடங்களையும் விட்டு வேகமாக வெளியேறிவருவது அதிகரித்துள்ளது. நகர்ப்புற மனிதன் சுரண்டும் வேட்கையில், சிக்கியுள்ள ஆதிவாசிகளின் வளமான பகுதிகள் இன்றைக்கு வேட்டைக்காடாக மாறிக்கொண்டுள்ளன.
ஆதிவாசிகளை மட்டும் குறிவைத்து தாக்கும் பல மாபியா கும்பல்கள் போகிற போக்கில் ஏராளமாக உருவாகியுள்ளன. இயற்கையின் வளங்களெல்லாம் ஒருசேர கொ்ட்டிவைக்கப்பட இடமாக, ஆதிவாசிகளில் இருப்பிடங்களான வனங்கள் கணிக்கப்படுகின்றன. எனவேதான், கனிமம், மற்றும் இன்ன பிறவற்றிற்காக பன்னாட்டு வணிகர்களும், நாடுகளுமாக விலங்கினும் கீழாக பழங்குடிகளை வேட்டையாடிவருகின்றனர்.
வனமும், அதன் வாசிகளும் வேறுவேறல்ல, வனம் அழியும்போது அதன் பிரிக்கவியலாத ஒருபகுதியான ஆதிவாசிகுடிகளும் அழிவுக்குள்ளாகின்றன. இதை நாகரிக மனிதன் உணருகிறானோ இல்லையே, வனக்குடியினர் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் இயற்கையே அவர்களது ஒரே வணக்கத்திற்குறிய கடவுளாகவிருக்கிறது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை ஆட்டிப்படைக்கும் வல்லரசுகள், அங்குள்ள பழங்குடியினரை தமது சுயநலத்திற்காக சுரண்டிவருகின்றன. நைஜீரிய வண்டல் பகுதிகளில் எண்ணெய் வளங்களை துளையிட்டு எடுப்பதற்காக, டச்சு மற்றும் பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமான ஷெல் ,அப்பகுதிகளிலுள்ள பழங்குடியினரான ஓகோனி இன மக்களையும் அவர்களது கடவுளான இயற்கை வளங்களையும் சென்ற காலங்களில் சூறையாடிகொண்டுபோயின.
வழக்கமான வழிகளில் சென்று , தமது சொற்படி கேட்கும் பொம்மை அரசுகளை நிறுவிக்கொள்ளும், ஏகாதிபத்திய நவகாலனிய நாடுகள் நைஜீரியாவிலும் , கொள்ளை போகும் இயற்கை வளங்களை தடுக்கப்போகும் பழங்குடிகளை தமது சொந்த நாட்டு படையணிகளைக் கொண்டே படுகொலை செய்ய தூண்டுகின்றன.
ஓகோனி இனத்தினர் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏவலராக செயற்படும் தன்நாட்டு படையணிகளுடன் மோதவேண்டிய துயரம் ஒரு புறமென்றால், தமது வயல் வரப்புகள் பன்னாட்டு எண்ணெய் நிறுவங்கள் கசிய விடும் பசை எண்ணெய்களால், வளமிழந்துவிட்டன. மேலும் பல கொடிய நோய்களையும் அவை பரவவிட்டுள்ளன.
இவற்றிற்கெதிராவெல்லாம் போரடிய ஒகேனி இனக் கவிஞன் கென்-சரோ விவாவிற்கு இந்த உலகம் தூக்குகயிற்றையே பரிசாக வழங்கிற்று.
காலம் காலமாக வனபழங்குடியினர் பற்றிய பார்வை என்னவோ நகரிய மனிதனிடம் எந்த மற்றத்தையுமே ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
கென்சரோ சொன்னார், ”இயற்கைக்கு ஆதரவான எமது போராட்டம் கொண்டிருக்கும் அனைத்து கேள்விகளையுமே ஒருநாள் இப்பன்னாட்டு நிறுவனங்கள் சந்தித்தே ஆகவேண்டியிருக்கும்.!” என்று. கென்சரோவின் இந்த எச்சரிக்கை இயற்கையை, பழங்குடியினரை சுரண்டும் யாவருக்குமானதே.
”உலகின் நுரையீரல்” என்று அழைக்கப்படும் தென்னமெரிக்கநாடான பிரேசில் வனக்குடிகளான சியர்ரா இனத்தினர், கொலம்பிய நாட்டு கலகக்காரர்களுக்கும், அந்நாட்டு படையணிகளுக்குமிடையேயான உள்நாட்டுப்போரில் சிக்கி, சின்ன பின்னமானதுடன். தமது உயிரினும் மேலான வனத்தின் ஆழ்ந்த அமைதியையும் இன்று இழந்துவிட்டனர்.
அங்குள்ள மழைக்காடுகளின், விலங்குகள், கனிமவளங்களை கொள்ளையிடும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் ஏராளமாக குவிந்துவருகின்றன. இத்தனைக்கும் சியர்ரா வனவாசிகள், தம்மை இயற்கையின் பெரியண்ணன் என்றும், நவமனிதர்களை சின்னண்ணன் என்றும் தழுவிக் கொள்கிறார்கள். ஆனால் நமது சின்ன அண்ணன்கள் செய்வதோ, ஆரத்தழுவும் அவர்கள், முதுகில் குத்துவதைத்தான்.
இந்தியாவில் மலைக்காடெங்கும் பழங்குடியினருக்கெதிரான போக்குகள் உலகமய வர்த்தகபோக்கிற்குப் பின்னர், வெகுவாக அதிகரித்துவிட்டன.
கனிம வளங்களை சுரண்டிச்செல்லும் பொருட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் பெருமுதலாளிகள் வரை ஆளும் கட்சிஆதரளுவுடன் அரச படைகளைக் கொண்டோ அல்லது தனியாக குண்டர் படைகளைக் கொண்டோ வனவாசிகளை அடக்கி ஒடுக்கி, அவர்களது நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
சதிஸ்கர் மாநிலத்தில் கனிமவளத்திற்காக பல தனியார் நிறுவனங்கள், பழங்குடிமக்களை படுகொலை செய்தும், அவர்களது இடங்களை சூறையாடுவதற்கும் அரச ஆதரவுடன், சல்வாஜூடும் போன்ற, குண்டர்படைகளைக் கொண்டுள்ளன.
இடப்பெயர்வுக்கும், கொடூர வதைகளுக்கும், பாலியல் வல்லுறவுக்கும் ஆளாகும் வனக்குடியினர், மாவோவினரின் வழிக்காட்டுதலில் இன்றைக்கு அரசு மற்றும் வணிக நிறுவனங்களை எதிர்த்து ஆயுதமேந்தியுள்ளனர்.
நர்மதை அணை மின் தேவைக்காகத் தேக்கப்பட்டபோது அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் இடம்பெயர்க்கப்பட்டனர் அவர்களுக்கான வாழ்விட வசதிகள் இன்னும் கானல் நீராகவே இருந்துவருகிறது.
வனபழங்குடியினர் பற்றிய அரசின் பார்வை மாறிவிடவில்லை, அல்லது அவர்களது இறைமை பற்றிய அக்கறை அரசுகள் கவனத்தில் கொள்வதில்லை என்பதையே அவர்களுக்களுக்கெதிரான, எல்லா உலக அரசுகளின் போக்குகளும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன.
அவர்ளை, அவர்களாக வாழவிடுவதுதான் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நவயுக மனிதனுக்கும் கூட பாதுகாப்பானதாகவிருக்கமுடியும்.
அமேசான் வனக்குடிகள் பற்றி அவர்களுடனே தங்கி ஆய்வு செய்துவந்துள்ள பொசல்லோ, வனக் குடிகள் பற்றி நாமும், நம்மைப்பற்றி அவர்களுமாக ஒருவரை ஒருவர் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? என்கிறார். நம்மிடமிருக்கும் மோசமானவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளாமலிருப்பதே யாவருக்கும் நல்லது என்கிறார். அவர்களை நாம் சந்திப்பதோ, அவர்களுடன் பேச முற்படுவதோ அவர்களின் இனிமையான வாழ்வை முடிவுக்கு கொண்டுவருவதாகத்தான் இருக்கும் என்கிறார்.
வனவாசியைப் பற்றிய ஒரு தமிழ் கவிதை இப்படி முடிகிறது.
செய்திபத்திரிகையை வாசிக்கக் கற்றுக்கொண்ட
காட்டுவாசி இப்படிக் கேட்டான்,
கற்பழிப்பு, இலஞ்சம், ஊழல்
இவையெல்லாம் என்ன என்று.
-இரா.மோகன்ராஜன்